Archives: மார்ச் 2018

ராஜாவின் கிரீடம்

நாங்கள் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பல் குத்தும் குச்சை எங்கள் முன்னேயிருந்த பஞ்சு தகட்டில் குத்தினோம். ஈஸ்டருக்கு முந்திய வாரங்களில், ஒவ்வொரு இரவு உணவின் போதும் நாங்கள் முள்ளினால் ஆன ஒரு கிரீடத்தை உருவாக்கினோம். அதிலுள்ள ஒவ்வொரு பல் குத்தும் முள்ளும், நாங்கள் அந்நாளில் செய்த தவறுகளையும், அதற்காக நாங்கள் மனம் வருந்தினதையும், கிறிஸ்து எங்கள் பாவங்களுக்கான அபராதத்தைச் செலுத்தி விட்டார் என்பதையும் நினைவுபடுத்துகிறது. இந்தப் பயிற்சியை நாங்கள் எங்கள் வீட்டிலும், ஒவ்வொரு இரவும் செய்தோம். எங்களுடைய தவறுகளினால் நாம் குற்றவாளிகளாகிறோம். நமக்கு ஒரு மீட்பர் தேவை என்பதைக் குறித்து நினைவுகூர இது உதவியது இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை விடுவித்தார் என்பதையும் நினைவுகூர்ந்தோம்.

இயேசு கிறிஸ்துவை சிலுவையிலறையும் முன்பு, முள்ளினாலான ஒரு கிரீடத்தைச் செய்து அதை இயேசுவுக்கு அணிவித்தது, ரோம போர் வீரர்களின் மிகக் கொடூரமானச் செயல். அவர்கள் இயேசுவிற்கு ராஜரீக உடையான சிவப்பு அங்கியை அணிவித்து, இயேசுவை அடிக்க பயன்படுத்திய கோலை, அவர் கையில் அரச செங்கோல் போல கொடுத்தனர். அவர்கள் இயேசுவை கேலி செய்து அவரை, ‘‘யூதருக்கு ராஜா” (மத். 27:29) என அழைத்தனர். அவர்கள், தங்களுடைய இச்செயல் பிற்காலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும் என்பதை உணராதிருந்தார்கள். இவர் ஒரு சாதாரண அரசன் அல்ல. இவர் ராஜாதி ராஜா. அவருடைய மரணமும், உயிர்த்தெழுதலும் நமக்கு நித்திய வாழ்வையளிக்கின்றது.

ஈஸ்டர் காலையில், நாங்கள் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவாகிய மன்னிப்பையும், புது வாழ்வையும் கொண்டாடும் வகையில் அங்குள்ள பல் குத்தும் குச்சிகளை எடுத்து விட்டு மலர்களைச் சொருகுவோம். தேவன் நம்முடைய பாவங்களையெல்லாம் நீக்கி விட்டு நமக்கு விடுதலையையும், அவருக்குள் நித்திய வாழ்வையும் தருகிறார் என்ற செய்தி எத்தனை மகிழ்ச்சிகரமானது.

துயரத்தின் பாதை வழியே

பரிசுத்த வாரத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையிலே அறையப்படுவதற்கு முன்னான நாட்களை நினைவு கூருவோம். எருசலேமின் வீதிகள் வழியே இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்ற பாதையை துயரத்தின் பாதை என அழைக்கின்றனர்.

எபிரெயர் நிருபத்தை எழுதியவர் இயேசு சென்ற பாதையை துயரத்தின் பாதையையும் விட மேலாகக் கருதுகின்றார். இயேசு துயரத்தின் பாதை வழியே கொல்கொதாவை நோக்கிச் செல்வதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டதினால், நாம் தேவனுடைய பிரசன்னத்தை நோக்கிச் செல்ல ஒரு ‘‘புதிய வாழும் வழி”யைத் திறந்துள்ளார் (எபி. 10:20).

பல நூற்றாண்டுகளாக யூத ஜனங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்குள் வருவதற்கு மிருகங்களை பலியிடுவதன் மூலம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டனர். ஆனால் இந்த சட்டங்களெல்லாம் வரப் போகிற நன்மையான காரியங்களின் ஒரு நிழலாகவேயிருந்தது. ஏனெனில் ஒரு காளை அல்லது வெள்ளாட்டுக்கடா, இவைகளின் ரத்தம் நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய முடியாது (வச. 1,4).

இயேசு மேற்கொண்ட துயரத்தின் வழியேயான பாதை, அவருடைய மரணத்திற்குப் பின்பு உயிர்த்தெழுதலுக்கும் வழி வகுத்தது. அவரை விசுவாசிக்கும் போது அவராலேயே நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று, அவருடைய தியாகத்தினாலேயே பரிசுத்தமாக்கப்படுகிறோம். அவருடைய நியாயப் பிரமாணங்களையும் கட்டளைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க முடியாமற் போனாலும், தேவனுடைய பிரசன்னத்தண்டை பயமில்லாமலும், தைரியமாகவும் வரும்படி நாம் அன்போடு அழைக்கப்படுகின்றோம் (வச. 10,22).

கிறிஸ்துவினுடைய துயரத்தின் பாதை, தேவனிடம் செல்ல நமக்கு ஒரு புதிய வாழும் வழியைத் திறந்துள்ளது.

அன்பின் பாத்திரம்

அநேக ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும், யாரும் பின்னால் திரும்ப வேண்டாம், இந்த வகுப்பறையின் பின் பக்கச் சுவரின் வண்ணம் என்ன? என்று சொல்லுமாறு கேட்டார். ஒருவராலும் பதிலளிக்க முடியவில்லை. ஏனெனில், நாங்கள் யாருமே அதைக் கவனிக்கவில்லை.

சில வேளைகளில் நாமும் வாழ்வின் சில அம்சங்களைப் பார்க்கத் தவறி விடுகிறோம். ஏனெனில் நம்மால் அவையனைத்தையும் சிந்தனைக்குள் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. சில வேளைகளில் நீண்ட நாட்களாக இருக்கின்ற சிலவற்றைக்கூட பார்க்கத் தவறி விடுகிறோம்.

இதைப் போன்றே, நானும் சமீபத்தில் இயேசு கிறிஸ்து தனது சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்ச்சியை மீண்டும் வாசித்தேன். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஏனெனில் இப்பகுதியை பரிசுத்த வாரத்தில் தவறாது வாசிப்பர். நம்முடைய இரட்சகரும் ராஜாவுமானவர் குனிந்து சீடர்களின் கால்களைக் கழுவுகின்றார். இது நம்மை வியப்படையச் செய்கிறது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூத வேலையாட்கள் கூட இச்செயலைச் செய்வதில்லை, ஏனெனில் அதனை அவர்களின் தகுதிக்குத் தாழ்ந்ததாகக் கருதினார். ஆனால் நான் இப்பகுதியில் கவனிக்கத் தவறியது எதுவெனின், மனிதனாகவும், தேவனாகவும் திகழ்ந்த இயேசு, யூதாசுடைய கால்களையும் கழுவினார். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தும் (யோவா. 13:11) இயேசு தன்னைத் தாழ்த்தி யூதாசின் கால்களையும் கழுவினார்.

அன்பு, ஒரு பாத்திர நீரில் ஊற்றப்பட்டது. தன்னைக் காட்டிக் கொடுப்பவன் மீதும் அவருடைய அன்பு பகிரப்பட்டது. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முந்திய வார நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது, நாமும் தேவனுடைய ஈவாகிய தாழ்மையைப் பெற்றுக் கொண்டு, இயேசுவின் அன்பை நம்முடைய நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் கொடுப்போம்.

நோக்கிப் பார், அமைதியாயிரு

மெக்ஸிக்கன் பாடலாசிரியர் ரூபன் சோடேலோ எழுதிய ‘‘அவரை நோக்கிப் பார்” என்ற பாடல் சிலுவையிலிருந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி விளக்கியுள்ளது. அவர் நம்மனைவரையும் இயேசுவை நோக்கிப் பார், அமைதியாயிரு என்கின்றார். ஏனெனில், இயேசு கிறிஸ்து சிலுவையில் செயல்படுத்திக் காட்டிய அன்பிற்கு முன்பாக சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. சுவிசேஷங்களில் விளக்கப்பட்டுள்ள காட்சிகளை, விசுவாசத்தோடு நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நாம் அந்த சிலுவையையும், அவருடைய இரத்தத்தையும், ஆணிகளையும், வேதனைகளையும் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இயேசு தன் கடைசி மூச்சை விட்ட போது இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடி வந்திருந்தவர்கள்... தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்” (லூக்கா 23:47-48). மற்றவர்கள் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் (வச. 49) அவர்களெல்லாரும் பார்த்து அமைதியாயிருந்தார்கள். ஒரேயொரு மனிதன் பேசுகிறான். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு ‘‘மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருந்தான்” என்றான் (வச. 47).

பாடல்களும், கவிதைகளும் இந்த பெரிய அன்பை விளக்கி எழுதப்பட்டிருக்கின்றன. அநேக ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா, எருசலேமின் பேரழிவுக்குப் பின் அதன் வேதனைகளை விளக்கி எழுதினார். ‘‘வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக் குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?” (புலம். 1:12) என ஜனங்களை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றார். எருசலேமிற்கு நடந்த கொடுமைகளைக் காட்டிலும் வேறே துக்கமில்லை எனக் கருதுகின்றார். எப்படியாயினும், இயேசு சகித்த துன்பத்தைக் காட்டிலும் வேறு துயரம் என்ன இருக்கிறது?

நாம் அனைவரும் சிலுவையின் அருகிலுள்ள பாதையின் வழியே கடந்து செல்கிறோம். அவருடைய அன்பை நோக்கிப் பார்க்கின்றோமா? வார்த்தைகளும், பாடல்களும் நம்முடைய நன்றியையும் தேவனுடைய அன்பையும் விவரிக்க போதாது. நாம் இயேசுவின் மரணத்தைக் குறித்து சிறிது நேரம் நினைத்துப் பார்த்து, நம் இருதயத்தின் ஆழத்தில் நம்முடைய ஆழ்ந்த அன்பினை அவருக்குக் கொடுப்போம்.

விளையச் செய்பவருக்கு மகிமையுண்டாவதாக

ஒரு நாள் எங்கள் கார் செல்லும் பாதைக்கு வலது பக்கத்தில் எதிர்பாராத விதமாக ஒரு மஞ்சள் நிறம், இரு பெரிய கற்களுக்கிடையே பிரகாசித்ததைக் கண்டேன். ஆறு ஓங்கி வளர்ந்த டாப்படில் செடிகள் அழகிய மஞ்சள் நிறமலர்களைக் கொண்டிருந்தது. நான் அவற்றை நடவோ, உரமிடவோ, அவற்றின் கிழங்குகளுக்கு நீர் விடவோயில்லை. எப்படி இவை எங்கள் நிலத்தில் முளைத்தன என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.

விதைகளைத் தூவும் ஓர் உவமையில் இயேசு ஆவிக்குரிய வளர்ச்சியி;ன் மறைவான கருத்துக்களை விளக்குகிறார். அவர் தேவனுடைய ராஜ்ஜியத்தை நிலத்தில் விதைகளைத் தூவுகின்ற ஒரு விவசாயிக்கு ஒப்பிடுகின்றார் (மாற். 4:26). விதைக்கிறவன் தன் விதையை நிலத்தில் தூவுகின்றான். அவன் தன் நிலத்திற்குத் தேவையான கவனத்தைக் கொடுத்திருக்கிறான். அந்த மனிதன் இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க அவனுக்குத் தெரியாத விதமாய் விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியெனில், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய் கொடுக்கும் (வச. 27-28). அந்த எஜமான் அறுவடையின்போது பலனடைகிறான் (வச. 29). இந்த விளைவின் பலன் அவனுடைய செயலின் பலனுமல்ல, அல்லது அந்த நிலத்திற்கு அவன் செய்த வேலையின் பலனுமல்ல. தேவனே விளையச் செய்கிறார்.

என்னுடைய டாப்படில்கள் மலர்ந்திருந்ததைப் போன்று, இயேசு சொன்ன உவமையில் சொல்லப்பட்ட விதைகளும் பலனளித்தது. தேவன் குறித்த நேரத்தில் அது நடக்கும். ஏனெனில் விளையச் செய்யும் வல்லமை தேவனுக்கேயுரியது. தேவனுடைய வருகை வரையில், நம்முடைய தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதோ அல்லது சபையின் விருத்தியைக் குறித்த தேவனுடைய திட்டம் ஆகியவை அவருடைய மர்மமான வழிகள், அது நம்முடைய திறமைகளைச் சார்ந்தது அல்ல, அவருடைய கிரியைகளைக் குறித்த நம்முடைய புரிதலையும் சார்ந்ததல்ல. ஆனாலும் நாம் தேவனைப் பற்றி தெரிந்து கொள்ளவும், சேவை செய்யவும், விளையச் செய்பவரைத் துதிக்கவும் அழைக்கப்படுகின்றோம். நம் மூலமாக அவரே பயிரிட்டுள்ளார். ஆவியில் முதிர்ச்சியடைந்தவற்றை அறுவடை செய்பவரும் அவரே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.

 

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.